புதுடெல்லி: இருபத்து மூன்று கட்சிகளை சேர்ந்த தலைவர்களின் ஒப்புதலுடன் மாநிலங்களவை நடத்தை விதிகளில் மாற்றம் செய்ய வசதியாக 77 விதிகளில் திருத்தம் செய்யப்பட்டும், 124 புதிய விதிகளை வகுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவை தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு தலைமையில் மாநிலங்களவையின் பொது நோக்கங்கள் குழுவின் கூட்டம் நடந்தது. அதில், 23 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, மாநிலங்களவையின் பழமையான நடைமுறைகளை மாற்றவும் புதிய நடைமுறைகளை வகுக்கவும் மீளாய்வுக் குழு கடந்த 2018 மே மாதம் அமைக்கப்பட்டது. இந்த குழுவானது, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் விதிகள், நடைமுறைகள், உத்தரவுகள் குறித்த ஆய்வு நடத்தியது. மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடு மற்றும் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மற்றும் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் தங்கள் ஆலோசனைகளை வழங்கினர்.