சென்னை: கொரோனா வைரஸ் பீதி காரணமாக சென்னையில் இருந்து ஹாங்காங் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை திடீர் என குறைந்தது. இதனால் 2 விமானங்களும் ரத்து செய்யப்பட்டது. கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமானம் வழக்கமாக தினமும் நள்ளிரவு 12.40 மணிக்கு சென்னைக்கு வந்து விட்டு, மீண்டும் அதிகாலை 2 மணிக்கு ஹாங்காங் புறப்பட்டு செல்லும். இந்த விமானத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். அதனால், 420 பயணிகள் வரை பயணிக்கத்தக்கதான போயிங் ரக விமானங்களை இந்த வழித்தடத்தில் இயக்கின.தற்போது, கொரோனா வைரஸ் பீதியால், ஹாங்காங் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
நேற்று அதிகாலை 2 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட விமானத்தில் பயணம் செய்ய 14 பேர் மட்டுமே இருந்தனர். அதே போல் ஹாங்காங்கில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய விமானத்திலும் மிக குறைந்த பயணிகளே இருந்தனர். இதனால் இந்த இரு விமான சேவைகளும் நேற்று ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, சென்னையில் இருந்து ஹாங்காங் செல்ல இருந்த 14 பயணிகள், இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து ஹாங்காங் செல்லும் விமானத்தில் சென்றனர்.ஹாங்காங் விமானம் அடுத்து இயக்கப்படுவது எப்போது என்று அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘பயணிகளின் எண்ணிக்கையை வைத்துதான் முடிவு செய்ய முடியும். இப்போது எதுவும் கூற முடியாது’ என்றனர்.