2.50 லட்சம் பணத்தை பெற்று ஏமாற்றியதால் ஆத்திரம் பைனான்ஸ் நிறுவன ஊழியரை கடத்தினார் நடிகர் கருணாஸ் கார் டிரைவர்: மேலும் 3 பேருக்கு போலீஸ் வலை

சென்னை: 2.50 லட்சம் பணத்தை ஏமாற்றிய தனியார் நிதி நிறுவன ஊழியரை கடத்தி வீட்டில் அடைத்து சித்ரவதை செய்ததாக நடிகர் கருணாஸ் கார் டிரைவர் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் சரத்குமார் (24). இவர் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும் திருவாடானை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸிடம் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். மலேசியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் மல்டி லெவல் நிறுவனத்தில் பணியாற்றும் சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த செல்வகுமார். இவர், ‘எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் வாரந்தோறும் பணம் கிடைக்கும்’ என்று சரத்குமாரிடம் கூறியுள்ளார். இதை நம்பி, கடந்தாண்டு ஏப்ரல் மாதம் ₹2 லட்சத்து 50 ஆயிரத்தை சரத்குமார் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.ஆனால், செல்வகுமார் சொன்னபடி அந்த நிறுவனத்தில் இருந்து பணம் வரவில்லை என்றதும் தனது பணத்தை சரத்குமார், திரும்ப கேட்டுள்ளார். ஆனால் பணத்தை தராததால் சரத்குமார்,கடந்த 19ம் தேதி இரவு நண்பர்கள் வசந்த், கார்த்திக் மற்றும் அஜித் ஆகியோருடன் வடபழனி 100 அடி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அருகே நின்று கொண்டிருந்த செல்வகுமாரை பைக்கில் ஏற்றிச்சென்று, சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் அடைத்து வைத்து நிதி நிறுவனத்தில் கட்டிய ₹2.50 லட்சம் பணத்தை கேட்டு மிரட்டி சரமாரியாக அடித்து மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வடபழனி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வகுமாரை மீட்டனர். சரத்குமார் உட்பட 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து செல்வகுமார் கொடுத்த புகாரின்படி நடிகர் கருணாஸ் கார் டிரைவர் சரத்குமார் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் மீது கொலை மிரட்டல், ஆள் கடத்தல் மற்றும் ஆபாசமாக பேசி தாக்கியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள சரத்குமார் உட்பட 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். அதேபோல், ஆசை வார்த்தை கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக செல்வகுமார், கனகேஸ்வரன் மற்றும் விஜய் ஈஸ்வரன் ஆகியோர் மீது கூட்டு மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: