ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் தீர்மானம் பூஜ்யத்திற்கு சமம்

* சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

* வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைப்பு

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுவிக்க கோரிய தமிழக அமைச்சரவையின் தீர்மானம் பூஜ்யத்திற்கு நிகரானது என்று மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தை ஆளுநருக்கு பரிந்துரைத்தது. ஆனால், அந்த  பரிந்துரை மீது தமிழக ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதையடுத்து, தன்னை விடுதலை செய்யாமல் சட்டவிரோத காவலில்  அடைத்து வைத்துள்ளதால், தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்திருந்தார்,  இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் ஆர்.சுப்பைய்யா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மாநில குற்றவியல் தலைமை வக்கீல் ஏ. நடராஜன் வாதிடும்போது, தமிழக அமைச்சரவையின் தீர்மானம் மீது தமிழக ஆளுனர் எந்த ஒரு முடிவையும் எடுக்காத வரை ஆளுநரின் அதிகாரம், செயல்பாடு குறித்து  கேள்வி எழுப்ப முடியாது.  தமிழக அரசு நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்று பரிந்துரை அனுப்பியதோடு மாநில அரசின் கடமை முடிந்தது. ஆளுநரின் முடிவு வரும்வரை நளினி சட்டபூர்வமான காவலில்தான் உள்ளார். இந்த வழக்கை ஆட்கொணர்வு வழக்காக தொடர முடியாது என்று வாதிட்டார்.   மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபால் வாதிடும்போது, மத்திய விசாரணை அமைப்பான சிபிஐ விசாரித்த இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்ய மாநில அரசு, மத்திய அரசை கலந்து ஆலோசிக்க வேண்டும். விடுதலை செய்வதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கண்டிப்பாக வேண்டும். ஆயுள் தண்டனை என்பது ஆயுள்காலம் முழுவதும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறியிருக்கிறது. அதன் அடிப்படையிலேயே நளினி தண்டனை அனுபவித்து வருகிறார்.

 ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சட்டபேரவையில் அனைத்து கட்சியினரும் ஒரு மனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்கனவே மத்திய அரசு நிராகரித்துவிட்டது. தற்போது நடைபெறும் அதிமுக அரசின் அமைச்சரவை தீர்மானம் என்பது மத்திய அரசு ஏற்றுகொள்ளாதவரை பூஜ்ஜியத்திற்கு சமமானது. அந்த தீர்மானத்திற்கு மதிப்பு இல்லை. ஆளுநரின் முடிவே இறுதியானது. அவரை ஒருவரும் நிர்பந்திக்க முடியாது. இதில் ஆட்கொணர்வு என்பது எழாது. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.

நளினி தரப்பில் ஆஜரான வக்கீல் ராதாகிருஷ்ணன், தமிழக அரசை ஆளுநர் நடத்துகிறாரா இல்லை மத்திய உள்துறை அமைச்சகம் நடத்துகிறதா என்ற சந்தேகம் எழுத்துள்ளது. மாநில அமைச்சரவை தீர்மானத்திற்க்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என்று வாதிட்டார்

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நளினி சட்டவிரோதமாக சிறையில் உள்ளாரா? அல்லது சட்டபூர்வமாக சிறையில் உள்ளாரா? என்பதுதான் இந்த வழக்கின் சாராம்சம். எனவே, இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

Related Stories: