வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு கவனம் செலுத்துகிறார் பிரதமர் மோடி: 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து பிரச்னைக்கும் தீர்வு...அமித்ஷா உறுதி

இட்டாநகர்: அருணாசலப் பிரதேசம் உருவாக்கப்பட்டதன் 34-ம் ஆண்டு தின கொண்டாட்ட நிகழ்ச்சி தலைநகர் ‎இட்டாநகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அங்கு தொழிற்சாலைகள், சாலை  திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ஆண்டு விழாவில் உரையாற்றிய அமித் ஷா, வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் பிரதமர் மோடி மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

கடந்த 3 ஆண்டுகளில் வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக 32 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்து 200 கிலோ மீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்தார். வட  கிழக்கு மாநிலங்களில் நிலவும் பிரச்னைகள் அனைத்துக்கும் 2024-ம் ஆண்டுக்குள் தீர்வு காணப்படும் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

சீனா எதிர்ப்பு:

இதற்கிடையே, அமித் ஷாவின் அருணாச்சலப் பிரதேச வருகைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதுகுறித்து பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் சுவாங், அருணாசலப்  பிரதேசம் என அழைக்கப்படும் பகுதியை சீன அரசு அங்கீகரிக்கவில்லை. அப்பகுதி திபெத்தின் தென்பகுதி என்பதில் சீனா உறுதியாகவும், தெளிவாகவும் இருக்கிறது. அருணாசல பிரதேசத்துக்கு இந்திய தலைவர்கள் செல்வது சீன  இறையான்மைக்கு எதிரானது.

எல்லையில் நிலவும் ஸ்திரதன்மை, இருநாடுகளிடையே பரஸ்பர அரசியல் நம்பிக்கையை பாதிக்கும் செயல். இருநாடுகளின் ஒப்பந்தத்தை மீறும் நடவடிக்கை என்றும் அவர் குற்றம்சாட்டினார். இந்தியாவும் சீனாவும் எல்லை பிரச்சனை  தொடர்பாக இதுவரை 22 முறை பேச்சுவார்த்தைகள் நடத்தி உள்ளன. ஆனால் இதுவரை எல்லை பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பதிலடி கொடுத்த இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாது அங்கமாக தொடர்ந்து இருந்து வருவதாகவும், சீனாவின் கருத்தை இந்தியா நிராகரிப்பதாகவும்  தெரிவித்திருந்தார்.

Related Stories: