சென்னை : தொல்லியல் அலுவலர் பணிக்கான தேர்வு சென்னையில் மட்டுமே நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 4 தேர்வு (2018-19, 2019-20ம் ஆண்டுக்கானது), 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வு ஆகிய 2 தேர்வுகளிலும் இடைத்தரகர் மூலமாக மிகப்பெரிய முறைகேடு நடந்தது தெரியவந்தது. இதையடுத்து டிஎன்பிஎஸ்சி, இதுதொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடியிடம் ஆவணங்களை ஒப்படைத்தது. சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முறைகேடு மூலமாக தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி நடத்திய பல்வேறு தேர்வுகளில் இது போன்ற முறைகேடுகள் நடந்ததாக அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. முறைகேட்டை தடுக்க டிஎன்பிஎஸ்சி அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.