குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் போராடுங்கள்: திமுக எம்.பி.க்களிடம் ஜனாதிபதி அறிவுறுத்தல்

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பெறப்பட்ட 2 கோடி கையெழுத்துகள் அடங்கிய கோப்புகளை ஒப்படைத்த திமுக எம்பிக்களிடம், அமைதியான முறையில் போராடுங்கள் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்றைய  சந்திப்பின் போது அவர்களிடம் அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில்  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தி.மு.க சார்பில்  சுமார் 2 கோடி பேரிடம் கையெழுத்து பெறப்பட்டு, அதற்கான படிவங்கள் அனைத்தும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து  ஜனாதிபதி மாளிகைக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக அனுப்பி வைக்கப்பட்டது.இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக நேற்று திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் எதிர்க்கட்சித்தலைவர்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை அவரது மாளிகையில் சந்தித்து பேசினார்கள். அப்போது,  திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, கனிமொழி, காங்கிரஸ் சார்பில் மக்களவை கொறடா மாணிக் தாக்கூர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  சார்பில் டி.கே.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சுப்பராயன், முஸ்லிம் லீக் கட்சியின் எம்.பி. நவாஸ்கனி, கொங்கு மாநாடு தேசிய கட்சி சார்பில் சின்னராஜ் ஆகியோர் இந்த சந்திப்பின் போது உடன் இருந்தனர்.

இதையடுத்து சந்திப்பின் பிறகு டி.ஆர்.பாலு மற்றும் திருமாவளவன் ஆகியோர் கூறியதாவது, “தமிழகம் முழுவதும் சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.சி.ஆர் ஆகியவைக்கு எதிராக பெறபட்ட 2 கோடியே 5 லட்சம் கையெழுத்துகள் அடங்கிய கோப்புக்களை  ஜனாதிபதியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றைய (நேற்று) சந்திப்பின் போது குடியுரிமை திருத்த சட்டத்தினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவரிடம் விளக்கமாக தெரிவித்தோம். சுமார் 20 நிமிடம் பொறுமையாக  கேட்டறிந்த அவர், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடுங்கள். ஆனால் அது அமைதியான முறையில் இருக்க வேண்டும் என எங்களிடம் அறிவுறுத்தினார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: