சென்னை: ‘தமிழகத்தில் உள்ள சிறு கடைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்’ என திமுக வர்த்தகர் அணி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக வர்த்தகர் அணி கூட்டம், மாநில வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசி முத்து மாணிக்கம் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இதில், விஜயராஜ், ஆறுமுகம், அய்யாத்துரை பாண்டியன், கிராகம்பெல், யுவராஜ், மதுரை தனசெல்வம், ராமகிருஷ்ணன், வி.பி.மணி, தூத்துக்குடி ராஜகுரு, மகேந்திரன், நெல்லை முருகன், திருச்சி பாலாஜி, சிவசுப்பிரமணியன், குடந்தை ஜீவா, கருணாகரன், தங்கமணி, புதுகை முத்து, ஈரோடு மகாலிங்கம், சேலம் பழனிச்சாமி, பாண்டித்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், ‘ஜிஎஸ்டி புதிய வரி விதிப்பு புரியாததாலும், பண தட்டுப்பாட்டினாலும், ரிட்டனை தாமதமாக கட்டும் வியாபாரிகளுக்கு அபராத கட்டணம் விதிக்கப்பட்டு 2017 முதல் 2019 வரை தாமத கட்டணம் மட்டும் 4172 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. 2017 ஜூலை முதல் 2018 செப்டம்பர் வரையிலான தமிழக அபராத தொகையை ஜி.எஸ்.டி கவுன்சில் தனது 31வது சட்டத்தின் கீழ் தள்ளுபடி செய்தது போல நடப்பு ஆண்டும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
சிறு கடைகளுக்கு இலவச மின்சாரம் தரவேண்டும். சமீபகாலமாக சென்னை மாநகரில், போலி காவலர், போலி பத்திரிக்கையாளர், போலி வழக்கறிஞர், போலி மனித உரிமை கழகம் என தோன்றி வியாபாரிகளை அச்சுறுத்துகின்றனர். மனித நேயத்துடன் அவர்களை அப்புறப்படுத்த காவல்துறையை வேண்டுகிறோம். வேகாத வெயிலிலும், திருமண கூட்டங்களிலும் என இரண்டு கோடி கையெழுத்தை - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பெற்று, ஈழத்தமிழனுக்கு இஸ்லாமியர்களுக்கும் நாம் தொப்புள் கொடி உறவுக்காக பாடுபட்ட இந்தியாவிற்கே விளக்காக, விளக்கமாக, வழக்கமாக செயல்படும் மு.க.ஸ்டாலினுக்கு இம்மாமன்றம் நன்றியை தெரிவிக்கிறது. தமிழகத்தில் 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு கட்டாய பொது தேர்வு என்பதை மாற்றி அமைப்பதற்கும் குரல் கொடுத்து போராடிய திமுக தலைவருக்கு நன்றி. சுட்டெரிக்கும் வெயிலில் மாணவர்கள் நிழற்குடை கூட இல்லாத பேருந்து நிறுத்தங்களில் மாணவர்கள், பொதுமக்கள் படும் இன்னல்களை மனதில் கொண்டு,நிழற்குடை வர்த்தகர் அணி சார்பில் அமைக்கப்படும்’ எனக்கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக காசிமுத்து மாணிக்கம் தெரிவித்தார்.