×

அனுமதிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்து சட்டமுன்வடிவை அரசு கொண்டு வராதது ஏன்?: மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல விவகாரத்தில், அனுமதிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்து சட்ட முன்வடிவை தமிழக அரசு ெகாண்டு வராதது ஏன் என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.   தமிழக சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று முதல்வர் கடந்த 9ம்  தேதி அறிவித்தார். அப்போது, புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்க மாட்டோம் என்று கூறினாரே தவிர, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதுமட்டுமின்றி கடந்த 10ம்தேதி மத்திய அரசுக்கு முதல்வர் எழுதிய கடிதத்திலும், அதுபற்றி குறிப்பிடப்படவில்லை.  ஆகவே அனுமதிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்து, இனிமேல் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் வராத வகையில், ஒரு சட்ட முன்வடிவை இதுவரை ஏன் கொண்டுவராமல் இருக்கிறீர்கள் என்பதுதான் என்னுடைய  கேள்வி.  மீன்வளத்துறை அமைச்சர் கடந்த 10ம்தேதி ஒரு கடிதத்தை மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ளார். பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பான சட்டமுன்வடிவை மசோதாவாக, தீர்மானமாகக் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்  என்று நான் வலியுறுத்துகிறேன். ஏன் என்றால் சட்டமன்றம் இன்றும், நாளையும் தான் நடைபெற உள்ளது. அத்தகைய நடவடிக்கையை அரசு மேற்கொண்டால் நிச்சயமாக, உறுதியாக திமுக அதற்கு முழு அளவு ஆதரவு தர தயாராக  இருக்கிறது.

 அதுமட்டுமின்றி நாடாளுமன்றத்தில் எங்களுடைய திமுக உறுப்பினர்கள் நிச்சயமாக இதுகுறித்து வலியுறுத்தி உறுதியாகப் பேசுவார்கள். எனவே அந்த வகையில் இந்தப் பிரச்னையை நான் முதல்வரின் கவனத்திற்கும், அரசின் கவனத்திற்கும்  ெகாண்டு வருகிறேன்.
 முதல்வர் பழனிசாமி:  டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றி அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அவர்களுடைய கோரிக்கையை ஏற்று,  அண்மையில் புதிய கால்நடை பூங்கா தொடக்க  விழா நிகழ்ச்சியில் நான் பேசும் போது, ‘டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும்’ என்ற அறிவிப்பை வெளியிட்டேன். இது சம்பந்தமாக, சட்ட நிபுணர்களுடன்  விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில், ஒரு நல்ல செய்தி விரைவில் வெளிவரும்.  மு.க.ஸ்டாலின்:  நான் தீர்மானமாகக் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறேன். 2 நாட்கள்தான் சட்டமன்றம் இருக்கிறது. இன்று மாலை கூட அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. எனவே ஒரு நல்ல முடிவு வரும் என்ற  அடிப்படையில்தான் இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறேன். இதனை நாங்கள் மட்டும் அல்ல, டெல்டா பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அதுகுறித்து நேற்றுக்கூட முதல்வர் இதே அவையில்  நாடாளுமன்றத்தில் குரல் கொடுங்கள்  என்று வீராவேசமாக, உணர்ச்சியோடு சொன்னார். அதனால்தான் நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன். நாடாளுமன்றத்தில் திமுக குரல் கொடுக்கத் தயாராக இருக்கிறது.

 முதல்வர்: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட உடனே, இதற்குண்டான பணிகள் எல்லாம் தொடங்கப்பட்டு விட்டது. சரியான முறையிலே சட்ட வல்லுநர்களை கலந்து ஆலோசித்துதான் இதை கொண்டு வர முடியும். ஏன்  என்றால் இதில் பல பிரச்னைகள் இருக்கிறது. நீங்கள் ஏற்கனவே பல செய்திகளை எல்லாம் சொல்லி இருக்கிறீர்கள்.அதை எல்லாம் விவரமாக சட்ட வல்லுநர்களுடன் விவாதிக்கப்பட்டு, நீங்கள் சொல்லியபடியே சட்டமன்றத்தின்  மூலமாக இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட நாங்கள் முயற்சி எடுக்கின்றோம். நிச்சயமாக நீங்கள் நினைக்கின்றபடி அனைத்தும் செயல்படுத்தப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags : government , Sanctioned, hydrocarbon,law,MK Stalin
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்