சாத்தூர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பலியாகினர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் பிரபாகரன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று காலை பட்டாசு தயாரிக்கும் பணியில் 225 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். பேக்கிங் செய்த பட்டாசுகளை ஒரு வாகனத்தில் ஏற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது பட்டாசுகளில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு ஆலையில் உள்ள அனைத்து அறைகளிலும் தீ மளமளவென பரவியது. இதையடுத்து ஊழியர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.