×

சாத்தூர் அருகே பயங்கரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் பலி; 6 பேர் படுகாயம்

சாத்தூர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பலியாகினர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் பிரபாகரன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று காலை பட்டாசு தயாரிக்கும் பணியில் 225 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். பேக்கிங் செய்த பட்டாசுகளை ஒரு வாகனத்தில் ஏற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது பட்டாசுகளில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு ஆலையில் உள்ள அனைத்து அறைகளிலும் தீ மளமளவென பரவியது. இதையடுத்து ஊழியர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

அப்போது ஒரு அறையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 2 அறைகள் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. அங்கு பணியில் இருந்த சாத்தூர் அருகே மீனம்பட்டியை சேர்ந்த கார்த்திக், பாண்டியராஜன் (28), பாறைபட்டி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (58) ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்து சாத்தூர், சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக சாத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Chatur 6 , 3 killed , terror crackers , Chatur 6 people injured
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் மயங்கி விழுந்து 2 பேர் பலி: சேலத்தில் சோகம்