ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தை கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியல் : பெண்கள் உள்பட 60 பேர் கைது

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டையை சுற்றி 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு செல்லும் சாலையின் குறுக்கே சுற்றுச்சுவர் எழுப்பும் பணியில் ராணிப்பேட்டை பெல் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. மேலும், மாவேரி ஓடை மற்றும் நீர்வழி பாதைகளை ஆக்கிரமித்து இடையூறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பெல் நிறுவனத்தை கண்டித்து லாலாப்பேட்டை சாவடி சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதையொட்டி அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் கடைகளை அடைத்து பெல் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ராணிப்பேட்டை பொன்னை நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அப்போது பொதுமக்கள் கூறுைகயில்  வழிவழியாக பயன்பாட்டிலுள்ள வழித் தடங்களை பெல் நிறுவனம் தனக்கு சொந்தம் என்ற முறையில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் செய்து வருகிறது. இதுகுறித்து கலெக்டர்,  பெல் நிறுவன அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை.

எனவே, கடையடைப்பு மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டோம் என்றனர். இதையடுத்து சிப்காட் போலீசார் மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.

Related Stories: