31,720க்கு விற்பனை தங்கம் சவரனுக்கு 312 அதிகரிப்பு: 2 நாட்களில் 514 எகிறியது

சென்னை: ஆபரண தங்கம் சென்னையில் நேற்று 2வது நாளாக உயர்ந்துள்ளது. நேற்று சவரனுக்கு 312 உயர்ந்து, சவரன் 31,720 என்ற புதிய உச்சத்தை தொட்டது. தொடர்ந்து 2 நாட்களில் சவரனுக்கு 514 அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் தொழில்துறைகள் முடங்கிக் கிடக்கின்றன. ஏராளமான நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. தொழிற்சாலைகளில் உற்பத்தி இல்லை. இதன் எதிரொலியாக சர்வதேச அளவில் பங்குச்சந்தைகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. பங்குகளில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.  இதன் எதிரொலியாக சென்னையில் கடந்த 13ம் தேதி ஆபரண தங்கம் மீண்டும் சவரன் 31,000ஐ தாண்டி, 31,112க்கு விற்பனையானது. கடந்த 16ம் தேதி சவரன் 31,392ஐ தொட்டது. 17ம் தேதி சற்று குறைந்தது. ஆனால், மீண்டும் நேற்று முன்தினம் கிராமுக்கு ₹24 உயர்ந்து ₹3,926க்கும், சவரனுக்கு 192 உயர்ந்து 31,408க்கும் விற்கப்பட்டது.

 கொரோனா வைரசால் சர்வதேச அளவில் பொருளாதார பாதிப்பு தீவிரம் அடையும் என்ற எச்சரிக்கையால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருவதே இதற்கு காரணம். சர்வதேச சந்தையில் நேற்று முன்தினம் ஒரு டிராய் அவுன்ஸ் (31.103  கிராம்) தங்கம் 1,594 டாலரை எட்டியது. தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் ஒரு  டிராய் அவுன்ஸ் 1,612 டாலர் வரை உயர்ந்தது. இதன் எதிரொலியாக சென்னையில் ஆபரண தங்கம் நேற்று கிராமுக்கு 39 உயர்ந்து 3,965க்கும், சவரனுக்கு 312 அதிகரித்தது. இது தங்கம் விலையில் புதிய உச்சமாக கருதப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: