ஸ்ரீவைகுண்டம் அருகே பத்மநாபமங்கலத்தில் இயற்கை விவசாயத்தில் விளைந்த வாழைத்தார்க்கு மவுசு அதிகரிப்பு: ரூ.1200க்கு ஏலம் போனது

ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் அருகே பத்மநாபமங்கலத்தில் இயற்கை விவசாயத்தில் விளைந்த பெரிய அளவிலான வாழைத்தார்க்கு ஏற்பட்ட மவுசு அதிகரிப்பால் ரூ.1200க்கு ஏலம் போனது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் தாமிரபரணி பாசனத்தை நம்பி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல் மற்றும் வாழை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் ஸ்ரீவைகுண்டம் அடுத்த பத்மநாபமங்கலத்தை சேர்ந்த காசி என்ற விவசாயி தனது வீட்டுத் தோட்டத்தில் வாழை சாகுபடி மேற்கொண்டார். இவற்றுக்கு இயற்கையாகக் கிடைக்கும் மாட்டுச் சாணம் உள்ளிட்டவற்றை உரங்களாகப் பயன்படுத்தினார்.

இதனால் இவரது தோட்டத்தில் இயற்கை விவசாயத்தில் விளைந்த பெரிய அளவிலான வாழைத்தார்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உருவானது. மேலும் அதிக விலைக்கு ஏலமும் போனது. குறிப்பாக கோழிக்கூடு ரக வாழைத் தார் ஸ்ரீவைகுண்டம் ஏலக்கடையில் நேற்று ஏலம் விடப்பட்டது. வழக்கமாக ரூ.250க்கு ஏலம் போகும் நிலையில் இயற்கை விவசாயத்தில் விளைந்த வாழைத்தார் ரூ.1200க்கு ஏலம் போனது. இந்த வாழை தாரை மற்ற விவசாயிகள் வியப்புடன் பார்த்து சென்றனர்.

Related Stories: