சென்னை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு புகாரில் முகாந்திரம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை தமிழக செயலாளர் மனு ஒன்றினை அளித்திருக்கிறார். அமைச்சர் வேலுமணி மீதான இந்த புகார் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கோரிய வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
வழக்கின் பின்னணி:
சென்னை, கோவை மாநகராட்சிகளில் உள்ள உள்கட்டமைப்பு பணிகளுக்கு வழங்கப்படும் டெண்டர்களை தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே வழங்கி அரசுக்கு கோடி கணக்கில் இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக புகார் அளித்து, நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் மற்றும் திமுகவின் அமைச்சர் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடர்ந்தனர். இந்த விசாரணையானது நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது லஞ்சஒழிப்புத் துறையின் விசாரணை அறிக்கையும், 200 சாட்சிகளின் வாக்குமூலமும் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அப்போது ஆரம்பகட்ட விசாரணை முழுமையான விசாரணை போன்று நடத்தப்பட்டுள்ளது என்று ஏற்கனவே உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்த வழக்கை பொறுத்தவரையில் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் அவர்கள் எடுத்து வைத்த வாதத்தில், லஞ்சஒழிப்புத்துறை விசாரணை கையேடு, 1992ல் குறிப்பிட்டுள்ள விசாரணை நடைமுறையின் படியும், பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் அளித்த வரைமுறைகளின் படியும், இந்த ஆரம்பகட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆரம்பகட்ட விசாரணைக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் இன்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லாததால் வழக்கை முடித்து வைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார் குறித்து, சிறப்பு குழு அமைத்து விசாரித்ததாகவும், இந்த விசாரணையில், புகாரில் அடிப்படை முகாந்திரமும் இல்லை என்று தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் இந்த வழக்கை முடித்து வைக்க கோரி அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.