சென்னை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு பணிகளை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணியினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் பெருமக்கள் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர். கீழடியில் கடந்த 2018ம் ஆண்டு அகழாய்வு பணி நடைபெற்றது. முதல் 3 கட்ட அகழாய்வு பணியினை மத்திய தொல்லியல் துறையினர் நடத்தினர். 4 மற்றும் 5ம் கட்ட அகழாய்வு பணியினை தமிழக தொல்லியல் துறையினர் நடத்தினர். கடந்த 2015ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் மற்றும் கட்டுமானங்கள் கண்டறியப்பட்டது. மேலும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கிடைத்தன. 2018ம் ஆண்டு நடந்த நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வில், கட்டட சுவர், உறைகிணறு, அரசு முத்திரை, பானை ஓடுகள், இரும்பு மற்றும் செப்புக்காசுகள், முத்து, பவளம் உள்ளிட்ட பழமையான பொருட்கள் கிடைக்கப்பெற்றன.