டெல்லி: நாட்டின் சர்க்கரை உற்பத்தி நடப்பு சந்தை பருவத்தில் இதுவரையிலான காலகட்டத்தில் 22 சதவீதம் சரிவடைந்துள்ளதாக இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் தெரிவித்துள்ளது. அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான சந்தை பருவத்தில் சர்க்கரை உற்பத்தி 22 விழுக்காடு சரிந்து 1 கோடியே 70 லட்சம் டன்னாக குறைந்துள்ளதாக இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் தெரிவித்துள்ளது. 2015 - 2016ம் ஆண்டு சந்தை பருவத்தில் சர்க்கரை உற்பத்தி 2 கோடியே 51 லட்சம் டன்னாக இருந்ததாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதுவே அடுத்து வந்த 2016 - 2017ம் ஆண்டு சந்தை பருவத்தில் 2 கோடியே 3 லட்சம் டன்களாகவும், 2017 - 2018ம் ஆண்டு சந்தை பருவத்தில் புதிய சாதனை அளவாக 3 கோடியே 25 லட்சம் டன்களாகவும் உள்ளது. இதனை தொடர்ந்து, 2018 - 2019ம் ஆண்டு சந்தை பருவத்தில் 3 கோடியே 31 லட்சம் டன்களாகவும் சர்க்கரை உற்பத்தி இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.