நடமாடும் ரேஷன் கடை
லால்குடி சவுந்தரபாண்டியன் (திமுக): லால்குடி தொகுதி நெருஞ்சலங்குடி கிராமத்தில் உள்ள நியாய விலை கடையை பிரித்து பள்ளிவயலில் பகுதி நேர நியாயவிலை கடை அமைக்க வேண்டும்.கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ: பலரும் பகுதி நேர கடைகள் வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த இடங்களில் நடமாடும் கடைகளாக நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
ஓபிஎஸ் மாடுபிடி வீரரா?
எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது, அவை முன்னவரை (ஓ.பன்னீர்செல்வம்) ஜல்லிக்கட்டு நாயகன் என்கிறார்கள். அவர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று மாடு பிடித்து இருக்கிறாரா, காளையை அடக்கி காட்டுவாரா? சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: விராலிமலை ஜல்லிக்கட்டுக்கு எதிர்கட்சித் துணைத்தலைவருக்கு அழைப்பு விடுக்கிறேன். அவர் அங்கு பார்வையாளராகவோ அல்லது மாடுபிடி வீரராகவோ வரலாம். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
நகைக் கடன் நிறுத்தம் ஏன்?
ஒட்டன்சத்திரம் சக்கரபாணி (திமுக): தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனாக ₹3 லட்சம் வரை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மத்திய அரசு அந்த திட்டத்தை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.அமைச்சர் செல்லூர் ராஜூ: இந்த ஆண்டு விவசாயிகளுக்கு வட்டியில்லாத பயிர்கடன் ₹11,000 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு நகைக்கடன் வழங்க அரசுநடவடிக்கை எடுக்கும். விவசாயிகளுக்கு தேவையான கடன் வழங்குவது அதிமுக அரசுதான். உண்மையான விவசாயிகளுக்கு கடன் இல்லை என்ற நிலை வராது.
வக்புவாரியம்
செயல்படவில்லை
கடையநல்லூர் அபுபக்கர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்): சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட செயலாளர் 2 துறைகளை கவனிக்கிறார். அவரால் வக்புவாரியத்தை கவனிக்க முடியவில்லை. எனவே, மீண்டும் வக்பு வாரியம் ெசயல்படும் வகையில் மக்கள் பிரிதிநிதிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேணடும். குடியுரிமை திருத்த சட்டத்தால் சிறுபான்மை மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். அமைச்சர் உதயகுமார் : அந்த சட்டத்தில் அப்படி ஒன்றும் இல்லை. 30 ஆண்டுகளில் இந்த ஆட்சியில் ஒரு இஸ்லாமியர் பாதிக்கப்பட்டிருந்தால் நாங்கள் பொறுப்பு ஏற்கிறோம். ஆனால், அப்படி ஒன்று நடக்கபோவதில்லை. குடியுரிமை திருத்த சட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை. அபுபக்கர் : இந்த அரசு எல்லா நிலைகளிலும் சிறுபான்மை சமூகத்துக்கு உற்ற தோழனாக இருக்க வேண்டும். வெந்தப்புண்ணில் வேல் பாயச்சுவது போல இருக்க கூடாது.