சென்னை: சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு பாஜவினர் திடீரென எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதால் மோதல் சூழ்நிலை உருவானது. இதனால் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.சிங்காரவேலரின் 161வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு நேற்று அரசு சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாபா.பாண்டியராஜன், பெஞ்சமின், கடம்பூர் ராஜு மற்றும் கலெக்டர் சீதாலட்சுமி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜவினர் கோஷமிட்டனர். இதையடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், பாஜவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது பின்னர் மோதலாக மாறும் சூழ்நிலை உருவானது.அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லும்படி கூறினர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பதற்றம் நிலவியது. இதையடுத்து மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.