காதலிக்க மறுத்ததால் விரக்தி இளம்பெண்ணின் மொபட் எரிப்பு : வாலிபருக்கு வலை

பெரம்பூர்: பெரம்பூர் சின்னகுழந்தை தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (30). இவர் அதேப் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை பல மாதங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஒரு வாரத்துக்கு முன்பு, காதலனுடன் பேசுவதை அந்த பெண் நிறுத்திவிட்டதாக தெரிகிறது. பிரபாகரன் பலமுறை முயன்றும் இளம்பெண் பேச மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் காதலி வீட்டுக்கு சென்று, வீட்டுக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த அவரது மொபட் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துள்ளார். இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் வந்ததால் பிரபாகரன், அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பின்னர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும் மொபட் எரிந்து நாசமானது.

இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர். மற்றொரு சம்பவம் வியாசர்பாடி ஏ.ஏ.ஆர் ரோடு பகுதியில் 2 பைக்குகள் தீப்பற்றி எரிவதாக வியாசர்பாடி போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அதற்குள், 2 பைக்குகளும் முற்றிலும் எரிந்திருந்தன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, வியாசர்பாடி அடுத்த கண்ணிகாபுரம் பகுதியை சேர்ந்த பிரபு (25), வியாசர்பாடியை சேர்ந்த சக்தி விக்னேஷ் (29) ஆகியோர் மேற்கண்ட பைக்குகளை நிறுத்திவிட்டு, அங்குள்ள ஓட்டலுக்கு சென்றபோது, மர்ம நபர்கள் தீவைத்து எரித்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Related Stories: