சென்னை: பெண் இன்ஸ்பெக்டருடன், எஸ்ஐ மகன் தொடர்பு வைத்துள்ளதாக கூறி, போலீஸ் குடும்பத்தினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் செல்லும் சாலையில், மேலக்கோட்டையூர் பகுதியில் தமிழக போலீஸ் குடியிருப்பு அமைந்துள்ளது. இதில், 3000க்கும் மேற்பட்ட போலீசாரின் குடும்பத்தினர் வசிக்கின்றனர். வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரியில் உள்ள போலீஸ் அகாடமியில் இன்ஸ்பெக்டர் பயிற்சி பெறும் ஜெயந்தி (44) என்பவர் இந்த குடியிருப்பில் தங்கியுள்ளார். இவரது வீட்டின் அருகே பாண்டியன் என்ற எஸ்ஐ வீடு உள்ளது. இவர் சமீபத்தில் ஓய்வு பெற்றார். பாண்டியன் தனது மகன் வெங்கடேசன் (37), மருமகள் ஜெயஸ்ரீ ஆகியோருடன் வசிக்கிறார். தனியாக வசித்து வந்த பெண் இன்ஸ்பெக்டர் ஜெயந்திக்கும், பாண்டியனின் மகன் வெங்கடேசனுக்கும் பழக்கம் ஏற்பட்டு, தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெங்கடேசனின் மனைவி ஜெயஸ்ரீ, தாழம்பூர் போலீசில் 2 முறை புகார் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால், போலீசாரின் குடும்பம் என்பதால், அவர்கள் சமாதானம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.