சென்னை: பெண் இன்ஸ்பெக்டருடன், எஸ்ஐ மகன் தொடர்பு வைத்துள்ளதாக கூறி, போலீஸ் குடும்பத்தினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் செல்லும் சாலையில், மேலக்கோட்டையூர் பகுதியில் தமிழக போலீஸ் குடியிருப்பு அமைந்துள்ளது. இதில், 3000க்கும் மேற்பட்ட போலீசாரின் குடும்பத்தினர் வசிக்கின்றனர். வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரியில் உள்ள போலீஸ் அகாடமியில் இன்ஸ்பெக்டர் பயிற்சி பெறும் ஜெயந்தி (44) என்பவர் இந்த குடியிருப்பில் தங்கியுள்ளார். இவரது வீட்டின் அருகே பாண்டியன் என்ற எஸ்ஐ வீடு உள்ளது. இவர் சமீபத்தில் ஓய்வு பெற்றார். பாண்டியன் தனது மகன் வெங்கடேசன் (37), மருமகள் ஜெயஸ்ரீ ஆகியோருடன் வசிக்கிறார். தனியாக வசித்து வந்த பெண் இன்ஸ்பெக்டர் ஜெயந்திக்கும், பாண்டியனின் மகன் வெங்கடேசனுக்கும் பழக்கம் ஏற்பட்டு, தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெங்கடேசனின் மனைவி ஜெயஸ்ரீ, தாழம்பூர் போலீசில் 2 முறை புகார் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால், போலீசாரின் குடும்பம் என்பதால், அவர்கள் சமாதானம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெயஸ்ரீ பக்கத்து வீட்டில் வசித்த இன்ஸ்பெக்டர் ஜெயந்தியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் வாக்குவாதம் முற்றி, இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, ஜெயஸ்ரீயை தாக்கியதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்து அங்கு வந்த வெங்கடேசன் எனது மனைவியை ஏன் தாக்கினீர்கள் என கேட்டு பெண் இன்ஸ்பெக்டர் ஜெயந்தியை சரமாரியாக தாக்கினார். இதுதொடர்பாக இருதரப்பினர் கொடுத்த புகாரின்படி தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதற்கிடையில், தாக்குதலில் காயமடைந்த இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, எஸ்ஐ மகன் வெங்கடேசன், மருமகள் ஜெயஸ்ரீ ஆகியோர் ரத்தினமங்கலம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.