சொத்து தகராறில் கொடூரம் ஆட்டோ டிரைவர் அடித்து கொலை

ஆவடி: ஆவடி அடுத்த கோவில்பதாகை, பூம்பொழில் நகர், பூங்கா தெருவைச் சேர்ந்தவர் புஜ்ஜி என்ற ராஜேஷ் (36). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சவுந்தர்யா (30). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் ராஜேஷ் வேலை முடிந்து வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அவர் செல்போனில் பேசிக்கொண்டே வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார். ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை வீட்டு அருகே உள்ள இறைச்சிக்கடை பகுதியில் சாலையோரம், தலை, கை, கால்கள் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காயங்களுடன் ராஜேஷ் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.  தகவலறிந்த ஆவடி டேங்க் பேக்டரி இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரித்தனர்.

அதில், கொலை செய்யப்பட்ட ராஜேஷுக்கு, நாகராணி என்ற அம்மா  உள்ளார். மேலும், இரு சகோதரர்கள் உள்ளனர். இதற்கிடையில் கடந்த வாரம் ராஜேஷ், நாகராணியிடம் சொத்துக்களை பிரித்து தருமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக, நாகராணி ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார். போலீசார், ராஜேஷை வரவழைத்து கண்டித்து அனுப்பி உள்ளனர். இதற்கிடையில் நாகராணியிடம், அவரது சகோதரர் ஒருவரும் சொத்தில் பங்கு கேட்டு பிரச்சனை செய்து உள்ளார். ராஜேஷ், அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதோடு மட்டுமல்லாமல், அவரது மனைவியையும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.  இதனால், உறவினர் ராஜேஷ் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். இதற்கிடையில், ராஜேஷ் கொலை செய்யப்பட்டதால் உறவினர்கள் சேர்ந்து அடித்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. கொலை தொடர்பாக ராஜேஷின் உறவினர்கள் இருவரையும் தேடி வருகின்றனர். மேலும், அவர்களை பிடித்த பிறகுதான் ராஜேஷ் கொலை தொடர்பான மர்ம முடிச்சுகள் வெளியில் வரும் என போலீசார்  தெரிவித்தனர்.

Related Stories: