பெரம்பூர் ரயில் நிலையம் அருகே அரசு நிலம் ஆக்கிரமிப்பு மாநகராட்சி கமிஷனர் ஆய்வு : நீதிமன்ற உத்தரவால் அதிரடி

பெரம்பூர்: பெரம்பூரில் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள அரசு நிலங்களை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினார். பெரம்பூர் நெடுஞ்சாலையில் பெரம்பூர் ரயில் நிலையம் அருகில் அரசுக்கு சொந்தமான நிலம் தனியார் சார்பில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அதை மீட்க உத்தரவிட வேண்டும் என கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேவராஜன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சம்பந்தபட்ட இடம் அரசுக்கு சொந்தமானது என வருவாய் ஆவணங்கள் கூறப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 14ம் தேதி பெரம்பூர் தாசில்தார் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு சம்பந்தபட்ட இடம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது என தெரிவித்துள்ளார்.

எனவே சென்னை மாநகராட்சி ஆணையர் சம்பந்தபட்ட இடத்தை ஆய்வு செய்து அது ஆக்கிரமிப்பு நிலம் என தெரியவந்தால் சட்டபடி அந்த நிலத்தை மீட்க வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் கட்டிடம் கட்டியிருந்தால் அதை இடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்தி வரும் 24ம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, நேற்று மதியம் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மத்திய வட்டார துணை ஆணையர் ஸ்ரீதர், 6வது மண்டல செயற்பொறியாளர் நாச்சியார், உதவி செயற்பொறியாளர் ரங்கநாதன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சம்பந்தபட்ட இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது, அரசு நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இவர்கள், தங்களிடம் உள்ள ஆவணங்களை உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர்.

Related Stories: