திருவனந்தபுரம்: கேரளாவில் பால் தட்டுப்பாட்டை போக்க உதவும்படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் கடிதம் அனுப்பி உள்ளார். கேரளாவில் கடும் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ெபரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பால் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பொதுவாக தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கேரளா பால் வாங்குவது உண்டு. ஆனால் கடந்த சில மாதங்களாக பிற மாநிலங்களில் இருந்து பால் வருவது மிகவும் குறைந்துவிட்டது. இதனால் பால் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில் பால் தட்டுப்பாட்டை போக்க தங்களுக்கு உதவும்படி கேரள முதல்வர் பினராய் விஜயன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
இதையடுத்து கேரளாவில் நிலவும் பால் தட்டுப்பாட்டை போக்க தாங்கள் உதவ தயாராக இருப்பதாக தமிழக முதல்வரும் பதில் கடிதம் அனுப்பி உள்ளார். இதுகுறித்து முதல்வர் பினராய் விஜயன் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில், கேரளாவில் நிலவும் பால் தட்டுப்பாட்டை போக்க உதவுமாறு தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியதாகவும், அதற்கு தமிழக முதல்வர் உதவுவதாக உறுதி அளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.