திருமலை: தெலங்கானா மாநிலம் ராஜம்பேட்டையை சேர்ந்தவர் வெங்கட், இவரது மகன் பிரதீப்(19). அதே பகுதியில் உள்ள மதுக்கடையில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் பிரதீப் தன்னுடன் பணிபுரியும் நண்பருடன் சேர்ந்து வேமுலவாடா பகுதிக்கு பைக்கில் சென்றார். பின்னர் வேமுலவாடாவிலிருந்து பிரதீப் மட்டும் தனியாக பைக்கில் வீட்டிற்கு சென்றார். உக்ரவாயி பகுதியில் உள்ள சாய்பாபா கோயில் அருகே சென்றபோது பைக், ஆட்டோ மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட பிரதீப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த காமாரெட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காமாரெட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.