×

பிளாஸ்டிக்கிற்கு நிரந்தர தடை எதிரொலி திருப்பதி கோயில் பகுதியில் கண்ணாடி பாட்டிலில் குடிநீர் : விரைவில் விற்பனை தொடக்கம்

திருமலை: திருப்பதி கோயிலில் பிளாஸ்டிக்கிற்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டு, மாற்று ஏற்பாடாக கண்ணாடி பாட்டில்களில் சுத்திகரிப்பு குடிநீர் விற்பனை விரைவில் தொடங்கப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இனி  ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பயன்படுத்த நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடாக ஏற்கனவே லட்டு  எடுத்து செல்வதற்கு சணல் பை மற்றும் பேப்பர் அட்டை பெட்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் பக்தர்கள் அதிக அளவில் ஒரு முறை பயன்படுத்தப்பட்டு வீசக்கூடிய பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் பெரும் சவாலாக மாறியது. இதையடுத்து தேவஸ்தான நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் தங்கும் அறைகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

இருப்பினும் கடைகள் மற்றும் ஓட்டல்களில் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. தொடர்ந்து கடந்த சில மாதங்களாக பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் திருமலைக்கு அனுமதிக்கப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும் என சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி பக்தர்களுக்காக கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தேவஸ்தான சுகாதார அலுவலர் ஆர்.ஆர்.ரெட்டி கூறியதாவது: சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பயன்படுத்துவதற்கு மண் குடுவை, செம்பு மற்றும் கண்ணாடி பாட்டில்கள் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வந்தது. அதன்படி, சில கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் ஒரு நிறுவனம் ₹40க்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கண்ணாடி பாட்டிலில் விற்பனை செய்ய முன்வந்துள்ளனர்.

நேற்று சோதனை அடிப்படையில்   கண்ணாடி பாட்டில்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு உள்ளது. சோதனை முடிவுகள் வந்த பிறகு விரைவில் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்வதற்காக இந்த கண்ணாடி பாட்டிலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்  விற்பனை செய்ய அனுமதிக்கப்பட உள்ளது.
மேலும் பக்தர்கள் 40 கொடுத்தால் ஒரு லிட்டர் கண்ணாடி பாட்டிலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட உள்ளது. பக்தர்கள் தண்ணீரை குடித்துவிட்டு பாட்டிலை திரும்பக் கொடுத்தால் 20 பக்தர்களுக்கு திரும்ப வழங்கப்படும் என தண்ணீர் பாட்டில் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தால் திருமலையில் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலில் ஏற்பட்டு வந்த சுற்றுச்சூழல் மாசு முற்றிலும் தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tirupati temple ,area , Permanent barrier, plastic Glass drinking water,Tirupati temple area:
× RELATED திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க...