×

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி மருந்துகள் விலை 70% வரை உயர்வு

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக, இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை 40 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்திய தொழில்துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மருந்து துறையில் மூலப்பொருட்கள் தேவைக்கு 70 சதவீதம் சீனாவையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. சில மருந்துகளுக்கான மூலப்பொருட்கள் இருப்பு 2 முதல் 3 மாதங்கள் வரை உள்ளது. ஆனால், சில அத்தியாவசிய மருந்துகளுக்கு கூட தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, வலி நிவாரணி, காய்ச்சல், தலைவலி, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் சில மருந்துகள் வரும் 20ம் தேதி வரைதான் இருப்பு உள்ளன. இதே நிலை நீடித்தால், இந்த மருந்துகளின் வலை உயரவும் வாய்ப்புகள் உள்ளன’ என இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு (பிக்கி) தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கொரோனா வைரசால் இந்திய மருந்து துறைக்கு ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்த குழு, கொரோனா வைரசால் இந்திய மருந்து துறையில் தட்டுப்பாடு ஏற்படும் நிமோனியா, நோய் எதிர்ப்பு, ஹார்மோன், விட்டமின் மருந்துகள் உட்பட 12 மருந்துகளுக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதற்கிடையில், மருந்து தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்ந்துள்ளதாக மருந்து துறையினர் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, வலி நிவாரணி, காய்ச்சல் உட்பட பல்வேறு தேவைகளுக்கு பொதுவாக பயன்படுத்தப்படம் பாராசிட்டமால் விலை 40 சதவீதம் வரை உயர்நஅதுள்ளது. இதுபோல், பாக்டீரியா தொற்றுக்களை போக்க நோய் எதிர்ப்பு மருந்தாக பயன்படுத்தப்படும் அசித்ரோமைசின் விலை 70 சதவீதம் அதிகரித்துள்ளது. அடுத்த மாத துவக்கத்தில் புதிய மருந்துகள் சப்ளை இல்லாவிட்டால், சில மருந்துகளுக்கு ஏப்ரல் முதல் கடுமையான பற்றாக்குறை ஏற்படும் என ஜைடஸ் கேடிலா மருந்து நிறுவன தலைவர் பங்கஜ் படேல் தெரிவித்துள்ளார்.

தொழில்துறை பாதிப்பை போக்க நடவடிக்கை: நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கொரோனா வைரசால் இந்திய தொழில்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. மேக் இன் இந்தியா திட்டத்துக்கு இதனால் ஏற்பட்ட பாதிப்பை இப்போதே வரையறுக்க முடியாது. பாதிப்புக்கு தீர்வு காண உரிய நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்படும். பார்மசி, கெமிக்கல் மற்றும் சோலார் கருவி தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை. எனவே, விலை உயரும் என்ற அச்சம் தேவையில்லை’’ என்றார்.

Tags : Corona virus outbreak , Corona virus outbreak, drugs cost up to 70%
× RELATED தமிழகம் முழுவதும் 1196 நடமாடும்...