சங்கரெட்டி: தெலங்கானாவில் சித்திபேட் நகரை அடுத்த அக்கன்னாபேட்டையை சேர்ந்த கூலித் தொழிலாளி தேவுனி சதானதம். இவர் தனது பக்கத்து வீட்டுக்காரருடன் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட தகராறின் போது, வீட்டில் இருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கியை எடுத்து வந்து அவரை நோக்கி சுட்டார். அதிர்ஷ்ட வசமாக, துப்பாக்கி குண்டுகள் சுவரை மட்டுமே துளைத்தன. இதையடுத்து, தேவுனி அங்கிருந்து தப்பிவிட்டார். அவரை தேடிப்பிடித்து கைது செய்து விசாரித்த போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதில், பக்கத்து வீட்டுக்காரருடன் அவ்வபோது உண்டாகும் சிறிய தகராறால் அடிக்கடி அஸ்னாபேட் காவல் நிலையத்துக்கு வரும் வழக்கம் இருந்ததாகவும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அப்படியொரு நாள் அதிகாலை வந்த போது, காவலர்கள் யாரும் இல்லாததால், ஆயுதங்கள் வைத்திருக்கும் அறையில் இருந்து துப்பாக்கிகளை திருடியதாகவும் தேவுனி கூறியுள்ளார்.