ஐதராபாத்: தெலங்கானாவில் பயணிகளுடன் நின்றிருந்த அரசு பேருந்தை போதை ஆசாமி ஓட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம், விகாராபாத்தில் டிப்போவில் இருந்து காரம்கோட் செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு அரசு பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. கடைசி பேருந்து என்பதால் அதில் 15 பயணிகள் மட்டுமே இருந்தனர். அதன் டிரைவர் மற்றும் கண்டக்டர் இரவு உணவு சாப்பிடுவதற்காக பேருந்தை நிறுத்திவிட்டு சென்றிருந்தனர். அப்போது போதை ஆசாமி ஒருவர் பேருந்தில் ஏறி அதனை ஓட்ட ஆரம்பித்தார். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் சந்தேகம் அடைந்தனர். கண்டக்டர் இல்லையா என கேட்டபோது நானே பணத்தை வாங்கி கொண்டு டிக்கெட்டை தருகிறேன் என கூறியுள்ளார். இது தொடர்பாக பயணிகளுக்கும் போதை ஆசாமிக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த நபர் பேருந்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு சென்றுவிட்டதாக தெரிகிறது.