சாலையில் புலி ஒய்யார நடை வாகன ஓட்டுநர்கள் அதிர்ச்சி

சத்தியமங்கலம்: ஈரோடு அருகே சாலையில் புலி நடமாடியதால், அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி,  சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகையான வன  விலங்குகள் வசிக்கின்றன. நேற்று முன்தினம் இரவு கர்நாடக மாநிலம் மைசூரில்  இருந்து தாளவாடி அருகே உள்ள நெய்தாளபுரம் கிராமம் செல்வதற்காக காரில் 4க்கும் மேற்பட்டோர் தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் வனச்சாலையில்  சென்று கொண்டிருந்தனர். சிக்கள்ளி வனப்பகுதியில் உள்ள வனச்சாலையில் சென்றபோது சாலையில் ஒரு புலி ஒய்யாரமாக  நடந்து சென்றது.

புலி சாலையில்  நடமாடுவதை கண்ட காரில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே காரில்  இருந்த ஒருவர் புலி நடமாடியதை தனது செல்போனில் வீடியோ எடுத்தார். சிறிது  நேரம் சாலையில் நடமாடிய புலி பின்னர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. தாளவாடி அருகே  சாலையில் புலி நடமாடிய சம்பவம் வாகன ஓட்டுநர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: