பழநி: பழநி ரயில் நிலையத்தில் பிரத்யேக டிக்கெட் கவுண்ட்டர் அமைத்து தர வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மதுரை தெற்கு ரயில்வே டிவிசனல் கமர்சியல் மேலாளரிடம் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் நிர்வாகிகள் அளித்த கோரிக்கை மனு: பழநி ரயில் நிலையத்தில் உள்ள முதல் நடைமேடைக்கு செல்ல சாய்வுதளம் அமைக்கப்பட்டிருந்தாலும், கைப்பிடிகள் அமைக்கப்படவில்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் பிடிமானமின்றி செல்ல சிரமப்படுகின்றனர். எனவே, முதல் நடைமேடைக்கு இருபுறமும் கைப்பிடி அமைக்க வேண்டும். 2வது மற்றும் 3வது நடைமேடைக்கு செல்ல அமைக்கப்பட்ட சாய்வுதளத்தில் ஒருபுறம் மட்டுமே கைப்பிடி உள்ளது. இரண்டு புறமும் கைப்பிடி அமைக்க வேண்டும். சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டின் இருபுறமும் கைப்பிடி அமைக்க வேண்டும்.