'டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகளை விட, சீருடைப் பணியாளர் தேர்வுகளில் பெரிய அளவில் மோசடி' : சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை : தமிழ்நாடு 8,888 சீருடைப் பணியாளர்கள் பதவிகளுக்கான தேர்வாணைய தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முறைகேடுகளை விட, சீருடைப் பணியாளர் தேர்வுகளில் பெரிய அளவில் மோசடி நடந்துள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

காவல்துறை தேர்வில் முறைகேடு : வேலூரில் மட்டும் 1019 பேர் தேர்ச்சி

காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்கள், சிறை வார்டன்கள், தீயணைப்பு வீரர்கள் என 8 ஆயிரத்து 888 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பாணையை வெளியிட்டது. பின், எழுத்துத்தேர்வு, நேர்முக தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடத்தப்பட்டு,  பிப்ரவரி 2ம் தேதி, தற்காலிக தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.இதில், வேலூரில் 1,019 பேரும், விழுப்புரத்தில் 763 பேரும்  தேர்வானதாகவும், இவர்கள் அனைவரும்  சிகரம் என்ற பயிற்சி மையத்தில் படித்தவர்கள் எனவும், இவர்களில் பலர் முறைகேடு செய்து தேர்வானவர்கள் என்றும் புகார் எழுந்தது.

 உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி திருவண்ணாமலையை சேர்ந்த அன்பரசன் உள்ளிட்ட 15 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.அந்த மனுவில், தேர்வில் கலந்து கொண்டவர்கள் பெற்ற கட் ஆஃப் மதிப்பெண் விவரங்கள், தமிழ் மொழியில் படித்தவருக்கான இடஒதுக்கீடு ஆகியவை முறையாக வழங்கப்படவில்லை. ஆதலால் தற்காலிக தேர்வுப் பட்டியலை ரத்து செய்ய வேண்டும். சீருடை பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் உதவியுடன், தனியார் பயிற்சி மையங்கள் காவலர் தேர்வுகளில் முறைகேடுகளை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முறைகேடுகளை விட, சீருடைப் பணியாளர் தேர்வுகளில் பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது. ஆதலால்  மாநில போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால், சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்,எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories: