சென்னை: சென்னை துறைமுகத்திற்கு வந்த சீன கப்பலில் இருந்தது சீன பூனையா என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், கொரோனா வைரஸ் விலங்குகளில் இருந்தே முதலில் மனிதர்களுக்கு பரவியது கண்டறியப்பட்டது. மேலும் இது காற்றின் மூலமும் வேகமாக பரவும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 11ம் தேதி இந்திய கப்பல்துறை அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், ‘சீனாவில் தங்கியிருப்பவர்கள் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி இல்லை’ என்று தெரிவித்தது. ஜன. 15 அல்லது அதற்கு பிறகு சீனாவில் தங்கியிருந்தவர்கள் நேபாளம், பூடான், வங்கதேசம், மியான்மர் எல்லைகள் வழியே ஆகாயம், தரை மற்றும் கடல் வழியாக இந்தியா வர தடைவிதிக்கப்பட்டது.