சென்னை: தேசிய சீனியர் பால் பேட்மின்டன் போட்டித் தொடர் சென்னை, செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் நேற்று தொடங்கியது.ஆண்கள் பிரிவில் புதுச்சேரி, ரயில்வே, இஸ்ரோ, ஆந்திரா, சட்டீஸ்கர், உத்தரப்பிரதேசம் , கேரளா உட்பட 36 அணிகள் லீக் சுற்றில் களமிறங்குகின்றன. தமிழ்நாடு இடம் பெற்றுள்ள பி-பிரிவில் கர்நாடகா, ஏஜேபி (சிபி), ஜேஎஸ்டபிள்யூ ஆகிய அணிகள் உள்ளன.
மகளிர் பிரிவில் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கோவா, பஞ்சாப் உட்பட 31 அணிகள் விளையாட உள்ளன. இதில் பி-பிரிவில் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, பீகார் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 1200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த தொடரின் இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நாளை மறுநாள் நடைபெறும். நேற்று நடந்த ஆடவர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் தமிழ்நாடு 35-28, 35-30 என நேர் செட்களில் கர்நாடகாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. மகளிர் ஐவர் குழு போட்டியில் நேற்று இஸ்ரோ அணி ராஜஸ்தானையும், மணிப்பூர் அணி ஜம்மு காஷ்மீரையும், ஒடிஷா அணி அசாமையும், மேற்கு வங்க அணி இமாச்சலப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தையும் வீழ்த்தின.