பள்ளிக்கரணை அருகே கூலி தொழிலாளி அடித்து கொலை? : தலைமறைவான 5 பேருக்கு வலை

வேளச்சேரி: பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம், சவுமியா நகர் பூங்கா அருகே, உடலில் காயங்களுடன் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக பள்ளிக்கரணை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், அவர் இறந்து கிடந்த பூங்காவிற்கு அருகே கட்டுமானப் பணி நடக்கிறது. அதில் மேற்கு வங்கம், ஆந்திரா, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளை சேர்ந்த 6 பேர் வேலை செய்து வருகின்றனர்.

அவர்களில் ஒருவர்தான் இறந்து கிடந்தவர் என தெரியவந்துள்ளது. ஆனால் மற்ற 5 பேரும் தலைமறைவாகி விட்டனர். இதனால் அவர்களுக்கு குடிபோதையில் ஏற்பட்ட மோதலில் அந்த ஆசாமியை அடித்துக்கொலை செய்தனரா? அல்லது வெளியிலிருந்து வந்து யாராவது இவரை அடித்துக் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதனால் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து அங்கு தங்கியிருந்தவர்கள் யார்? வேறு யாரும் புதிய நபர்கள் வந்தார்களா? என்ற கோணத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அங்கு தங்கியிருந்த 5 பேரும் வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றார்களா? என்பது குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவர்களில் யாராவது ஒருவர் சிக்கினால் தான் மற்ற விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: