×

அனந்தராவ் சர்க்கிள் பகுதியில் டிரான்ஸ்பார்மரில் பயங்கர தீ விபத்து

பெங்களூரு: பெங்களூரு அனந்த்ராவ் சர்க்கிள் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் விதானசவுதா, காந்திநகர், அரண்மனை சாலை உள்பட பல்வேறு இடங்களில் பல மணி நேரம் மின்சாரத்தடை ஏற்பட்டது. பெங்களூருவின் இதயம் போன்ற பகுதியான அனந்த்ராவ் சர்க்கிள் நகரின் முக்கிய இடங்களில் ஒன்று. போராட்டக்காரர்கள் ஆக்கிரமிக்கும் இடமாக இது விளங்குகிறது. நாள்தோறும் இங்கு ஏதாவது ஒரு போராட்டம் நடைபெறுவது வழக்கம் இந்த பகுதியில் பெஸ்காம் மையத்தின் டிரான்ஸ்பார்மர்  அமைந்துள்ளது. நேற்று மதியம் திடீரென்று இந்த மின்மாற்றியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்துவிட்டு எரிந்த தீ அருகாமையில் இருந்த பிற மின்மாற்றிகளுக்கும் பரவியது. இதனால் பெரும் விபத்து ஏற்பட்டது.

சம்பவ இடத்தின் அருகே இருந்தவர்கள் இது குறித்து தீயணைப்பு மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த மின்மாற்றி தீ விபத்தால் பெங்களூரு காந்திநகர், பிரஸ்கிளப், காங்கிரஸ் அலுவலகம், அவென்யூ ரோடு, சிக்பேட்டை, விதானசவுதா மற்றும் மல்லேஸ்வரத்தில் பல பகுதிகளிலும் மின்சாரத் தடை ஏற்பட்டது. எவ்வளவோ முயற்சித்தும் உடனடியாக இந்த மின் தடைகள் சரி செய்யப்படவில்லை. பின்னர் பிரத்யேக கருவிகளை கொண்டுவந்து, பழுது ஏற்பட்ட இடங்கள் மற்றும் தீ விபத்து ஏற்பட்ட உதிரி பாகங்கள் சரி செய்யப்பட்டது. இதையடுத்து மின் தடை சரியானது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், மின்மாற்றியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : area ,Transformer ,Anantarao Circle ,Terrorist Fire ,Anantarao Circle Area , Terrorist fire ,Transformer ,Anantarao Circle area
× RELATED தனியார் வங்கி மேலாளரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது..!!