பெங்களூரு: எனது அரசின் சாதனைகள் கவர்னர் விஆர் வாலா உரையில் இடம் பெற்றுள்ளது. இதற்காக நன்றியை கூறிக்கொள்கிறேன் என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா கூறினார். சட்டப்பேரவையில் மாநில கவர்னர் விஆர் வாலா உரையாற்றியது குறித்து டிவிட்டர் பதிவில் சித்தராமையா கூறியிருப்பதாவது: 2013 முதல் 2018 வரை ஐந்து வருடம் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. ஐந்தாண்டில் அன்னபாக்யா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. காங்கிரஸ் அரசின் சாதனைகள் கவர்னர் உரையில் இடம் பெற்றுள்ளன. இதற்காக முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜ அரசுக்கு நன்றியை கூறிக்கொள்கிறேன்.
அதே நேரம் பாஜவின் ஆட்சியில் எவ்வித திட்டங்களும் அமல்படுத்தப்படவில்லை என்பதால் கவர்னர் விஆர் வாலா உரையில் ஆளுங்கட்சி சாதனை என்று தனியாக எதுவும் இடம் பெறவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கவர்னர் வேண்டுகோள்: கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றிய கவர்னர் விஆர் வாலா, கர்நாடகா அரசின் (கூட்டணி அரசு உள்ளிட்ட) செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது என்று குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி, உற்பத்தி துறையில் மாநிலத்தின் பங்களிப்பு உள்ளிட்ட அம்சங்களையும் தவறாமல் சுட்டிக்காட்டிய கவர்னர், மேலவை மற்றும் பேரவை ஆகிய இரண்டு அவையில் சிறப்பாக விவாதம் நடைபெறவேண்டும். அதன் வாயிலாக மக்களுக்கு புதிய வசதிகள் கிடைக்கச் செய்ய வேண்டும். பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்கள் இதை மனதில் வைத்து சிறப்பாக விவாதம் நடத்த வேண்டும் என்றார்.