பெங்களூரு: நடிகர் தர்ஷன் பிறந்த நாள் விழாவின் போது பொது சொத்துகளை சேதப்படுத்தியதாக அவரது ரசிகர்கள் மீது ஆர்.ஆர்.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெங்களூரு ஆர்.ஆர்.நகர் சரகத்திற்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் கன்னட நடிகர் தர்ஷன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்காக பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ரசிகர்கள் அனைவரும் தர்ஷனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது சில விஷமிகள் மதுபானம் அருந்திவிட்டு நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். அவர்களில் சிலர் அந்த பகுதியில் இருந்த பொதுமக்களின் உடமைகளை சேதப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக அதே பகுதியை சேர்ந்த ராமபிரசாத் என்பவரின் வீட்டின் வளாகத்தில் இருந்த மரங்கள் மற்றும் வாகனங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் தர்ஷன் ரசிகர்கள் அடித்து நொறுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று காலையில் தான் இந்த சம்பவம் ராமபிரசாத்திற்கு தெரியவந்தது. அவர் உடனே ஆர்.ஆர்நகர் காவல் நிலையத்திற்கு சென்று இது குறித்து புகார் அளித்தார். அதில் நடிகர் தர்ஷன் பிறந்த நாளின் போது அவரது ரசிகர்கள் சிலர் என்னுடைய வீட்டில் இருந்த வாகனங்கள் மட்டுமின்றி பொது சொத்துகளையும் சேதப்படுத்தி கூறியுள்ளார். அந்த புகாரை ஏற்ற போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.