நாகையில் ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம்: 14 மாவட்ட இளைஞர்கள் பங்கேற்பு

நாகை: நாகை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் இன்று தொடங்கியது. இதில் 14 மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்றனர். நாகை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் இன்று(17ம் தேதி) அதிகாலை தொடங்கியது. இதில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், புதுகை, நாகை, திருவாரூர் ஆகிய தமிழகத்தைச் சேர்ந்த 14 மாவட்ட இளைஞர்களும், பாண்டிச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் கலந்து கொண்டனர்.

ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்காக நேற்றிரவே(16ம் தேதி) முகாம் நடைபெறும் இடத்திற்கு ஏராளமான இளைஞர்கள் குவிய தொடங்கினர். கர்னல் ரத்தோர் தலைமையில் ஆட்சேர்ப்பு முகாம் இன்று காலை துவங்கியது. முகாமில் கலந்து கொள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்பித்த இளைஞர்கள் தங்களது நுழைவுச்சீட்டுகளை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து எடுத்து வந்தனர். மேலும் விண்ணப்ப படிவத்தில் கேட்டது போல் உறுதிமொழி பத்திரம், பத்தாம் வகுப்பு அல்லது பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, புகைப்படங்கள், இருப்பிடச்சான்று, திருமணம் ஆகவில்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை எடுத்து வந்தனர்.

முன்னாள் படைவீரர் குடும்பத்தை சார்ந்தவர்கள் ரிலேஷன்ஷிப் சான்றுகளை எடுத்து வந்தனர். ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொண்ட இளைஞர்களின் உயரம், எடை ஆகியவை சரிபார்க்கப்பட்டது. இதன்பின்னர் ஓடுதல், சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் மருத்தவ பரிசோதனை ஆகியவை மேற்கொள்ளப்பட்டது. முகாம் வரும் 26ம் தேதி நடை நடைபெறுகிறது. சோல்ஜர் டெக்னிக்கல் பதவிக்கு பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சியும், சோல்ஜர் டிரேஸ்மேன், சோல்ஜர் ஜெனரல் டியூட்டி ஆகிய பதவிக்கு எட்டாம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: