சென்னை: அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்மை கல்லூரியை அரசு கல்லூரியாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஆளுகையில் செயல்பட்டு வந்த மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவ கல்லூரியாக அறிவிக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் வேளாண் கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கைவிடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் கல்லூரி ஈடு இணையற்ற உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருந்தாலும் அக்கல்லூரியில் வழங்கப்படும் பட்டங்களின் தரம் குறித்து பல்வேறு ஐயங்கள் எழுவதாக தெரிவித்துள்ளார். இதுபோன்ற நிலைகளை மாற்றி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரியில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் கல்லூரியை அரசு கல்லூரியாக்க வேண்டும் எனவும் அதனை கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.