சென்னை: நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்தும் நடைமுறையை தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்த உத்தரவுக்கு தடைவிதிக்க கோரிய நடிகர் விஷாலின் மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சங்கத்திற்கு கடந்த ஜூன் 23 ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் தபால் ஓட்டுக்கள் போட அனுமதிக்கவில்லை என உறுப்பினர்கள் சிலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் முறையிட்டனர்.
இவ்வழக்குகளை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டதுடன் அடுத்த 3 மாதங்களுக்குள் மறுதேர்தல் நடத்தவும் உத்தரவிட்டார். இந்த தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமிக்கப்பட்டார். நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலம் முடிந்த பிறகு எடுத்த எந்த முடிவுகளும் செல்லாது என கூறிய ஐகோர்ட் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படும் வரை சங்க நிர்வாகத்தை தனி அதிகாரி கவனிப்பார் எனவும் தெரிவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இதில், நடிகர் சங்க தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும். மீண்டும் தேர்தல் நடத்தும் நடைமுறையை தொடர அனுமதி அளித்தது. மேலும், ஐகோர்ட் ஒப்புதலின்றி தேர்தல் அறிவிப்பாணை வெளியிடக் கூடாது. சிறப்பு அதிகாரி நியமனம் செல்லும். தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கும் சேர்த்து விசாரணைக்கு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை பிப். 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.