×

ஆழியார் அணை கரையோரம் உலா வரும் முதலையால் பரபரப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணை கரையோரம் உலா வரும் முதலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அணைப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்,  கடந்தாண்டு ஜூலை முதல் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்ததால், மொத்தம் 120 அடி கொண்ட அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து குறிப்பிட்ட மாதங்களில்  அணை முழு அடியை எட்டியது. இதையடுத்து, நவம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை சிலநாட்கள் மட்டுமே பெய்தது.

அதன்பின், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததால், கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து குறைய துவங்கியதால்,  அணை நீர்மட்டம் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் 100 அடியாக சரிந்தது. இந்நிலையில், ஆழியார் அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறப்பால், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நீர்மட்டம் கிடுகிடு என குறைந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 77 அடியாக சரிந்துள்ளது. நாளுக்குநாள் அணையில் நீர்மட்டம் குறைந்து வருவதால், அணையின் கரையோரத்தில் உள்ள மணல்மேடுகள் வெளியே தெரிகிறது. இதனால், கடந்த சில நாட்களாக, அணையில் இருந்து முதலைகள் வெளியேறி கரையோரம் அடிக்கடி வந்து செல்கிறது.

நேற்று முன்தினம், ஒரு முதலை அணையில் தண்ணீர் வற்றிய கரையோர பகுதியில் அங்கும் இங்குமாக உலா வந்தது. இதைப்பார்த்த சுற்றுலா பயணிகள் அலறியபடி சிதறி ஓடினர். ஆழியார் அணையில் தண்ணீர் வற்றி வருவதால், தண்ணீரில் இருந்து முதலை வெளியேறி பகல் நேரத்திலயே உலா வருகிறது. இதனால், அணைப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தவிர்க்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Aliyar Dam ,river , Aliyar Dam
× RELATED ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டுக்கு மீண்டும் தண்ணீர் திறப்பு