முதல்வராக பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து எடப்பாடி பழனிசாமி: சாதனை மலர் வெளியீடு

சென்னை: தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு செய்தது அடுத்து மூன்றாண்டு சாதனை புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் சாதனை புத்தகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முத்திரை பதித்த மூன்று ஆண்டு முதலிடமே அதற்கு சான்று என்ற தலைப்பில் சென்னை தலைமை செயலகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்று நேற்றுடன் 3 ஆண்டுகள் முடிந்து, 4வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.

இந்த 3 ஆண்டுகளில் முதல்வர் எடப்பாடி எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி  உள்ளார். அது தொடர்பாக அந்த புத்தகத்தில் குறிப்பிப்பட்டவை; காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது. பெரிய ஏரிகள், சிறு பாசன ஏரிகள், குளங்கள், ஊரணிகள் மற்றும் குட்டைகள் போன்றவற்றை தூர்வாரி குடிமராமத்து என்ற திட்டம்  துவங்கப்பட்டு இதுவரை ரூ.930.25 கோடியில் 4,965 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 83 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை தூர்வாரப்பட்டு, 2,37,492 கனமீட்டர் வண்டல்மண் 1,846 பயனாளிகளுக்கு விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல நலத்திட்டங்கள் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

சமீபத்தில், மாமல்லபுரத்தில், பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருபெரும் உலகத் தலைவர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வுக்கு சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த  தமிழக அரசையும், காவல் துறையினரையும் பிரதமர், சீன அதிபர், சீன நாட்டு அதிகாரிகளும் வெகுவாக பாராட்டினார்கள். தூய்மை பாரத திட்டத்தின் கீழ் ஊரகத் தூய்மை மாநிலமாக தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான விருது உள்ளிட்ட  பல்வேறு விருதுகள் பெற்றுள்ளது. முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 16,382 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார் எனவும் அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

சட்டப்பேரவையில் உற்சாக வரவேற்பு

தமிழக சட்டப்பேரவைக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வராக பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related Stories: