நிதி நிலை அறிக்கை மீதான விவாதம்: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று மீண்டும் கூடுகிறது தமிழக சட்டசபை

சென்னை: சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. முஸ்லிம்கள் போராட்டம், டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரங்களை பேரவையில் எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. அன்றுபேரவையில், 2020-21 நிதிஆண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல்முடிந்ததும் பேரவையை 17-ம்தேதிக்கு தள்ளிவைப்பதாக பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடந்தது. பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தை 4 நாட்கள், அதாவது பிப்.17 முதல் 20-ம்தேதிவரை நடத்துவது எனமுடிவெடுக்கப்பட்டது. அதன்படி, 2 நாள் விடுமுறைக்குப் பிறகு பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. முதலில் மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது. பின்னர், பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகிறது. 18, 19 ஆகிய இரு தினங்களும் விவாதம் தொடர்ந்து நடக்கும். விவாதத்துக்கு பதிலளித்து 20-ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றுகிறார்.

இதற்கிடையே, குடியுரிமைச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றுக்கு எதிராகதமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தபோராட்டத்துக்கு அரசியல்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அதுபற்றி பேரவையில் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் பிரச்சினை எழுப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம் குறித்து பேரவையில் விவாதிக்க கோரி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பில் பேரவைத் தலைவரிடம் ஏற்கெனவே மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்தவிவகாரம் குறித்தும் எதிர்க்கட்சிகள் பிரச்சினை கிளப்பலாம் என கூறப்படுகிறது.

Related Stories: