×

21 பேருடன் தூத்துக்குடி வந்தது மருத்துவக்குழு ஆய்வுக்குப்பின் திருப்பி அனுப்பப்பட்ட சீன கப்பல்: துறைமுக சுகாதார அதிகாரி தகவல்

தூத்துக்குடி:  பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்ட ரூயி என்ற சரக்கு கப்பல் ஜன.17ம் தேதி சீனாவின் ஷியாமன் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு 7ம் தேதி சிங்கப்பூருக்கு சென்றது. அங்கிருந்து 8ம் தேதி காற்றாலை உதிரி பாகங்களை  ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு 13ம் தேதி வந்தது. அந்தக் கப்பலில் சீனாவை சேர்ந்த 17 பேரும், மியான்மரைச் சேர்ந்த 4 பேரும் இருந்தனர். நேற்று முன்தினம் கப்பலில் இருந்து சரக்குகள் இறக்கப்பட்டது. கப்பலில் வந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து எந்த சோதனையும் நடத்தப்படாமல் தூத்துக்குடி துறைமுகத்துக்குள் அனுமதிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. ஆனால் நேற்று  முன்தினம் சரக்குகளை இறக்கிவிட்டு அந்த கப்பல் அதிகாலை 2 மணியளவில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து துறைமுக சுகாதார அதிகாரி ஒருவர் கூறுகையில்: தூத்துக்குடி துறைமுகத்திற்கு வரும் அனைத்து கப்பல்களும், அதிலிருக்கும் மாலுமிகள், ஊழியர்கள் என அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களுக்கு  கொரோனா உள்ளிட்ட எந்த வைரஸ் பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்த பின்னரே துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. சீன கப்பலும் மாலுமிகளும் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என தெரியவந்த பின்பே துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான மருத்துவ ஆய்வறிக்கை  துறைமுக நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்றனர்.

இதற்கிடையே தூத்துக்குடியில் உள்ள ஒரு உரத்தொழிற்சாலைக்கு ஈரானிலிருந்து பர்னஸ் ஆயில் ஏற்றி வந்த ஆயில் டேங்கர் கப்பலும் இதுபோன்று தடுத்து நிறுத்தப்பட்டது. அதில் பணியில் இருந்த அனைவரும் தீவிர மருத்துவ  பரிசோதனைக்கு பின்னரே கப்பல் துறைமுகத்திற்குள் அழைத்து வரப்பட்டது. பர்னஸ் ஆயிலை இறக்கிய பின்னர் துறைமுக மருத்துவ துறையினர் முன்னெச்சரிக்கை தடுப்பு மருந்துகள் வழங்கினர். அதன் பின்னர் அந்த கப்பலும்  அதிகாலை 2.15  மணிக்கு துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

Tags : Chinese ,team inspection , Chinese vessel returned after medical team inspection: port health official
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...