திருவொற்றியூர்: மணலி மண்டலம், 17வது வார்டு கொசப்பூரில் உள்ள சுடுகாடு புதர் மண்டி காணப்படுவதால் சடலங்களை எரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மணலி மண்டலம், 17வது வார்டுக்குட்பட்ட கொசப்பூரில் மாநகராட்சிக்கு சொந்தமான மயான பூமி உள்ளது. இங்கு கொசப்பூர், கொசப்பூர் 1ம் பகுதி, விஸ்வநாததாஸ் நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த மயானத்தில் எங்கு பார்த்தாலும் முட்செடிகள் அதிக அளவில் வளர்ந்து கிடக்கிறது. இதனால் இறந்தவர்களின் சடலத்தை சுமந்து வரும் பொதுமக்கள் நடக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இங்கு தண்ணீர், தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் சடலங்களை அடக்கம் செய்யும்போது சடங்கு செய்ய தண்ணீர் இல்லாததால் வீட்டில் இருந்து குடங்களில் தண்ணீர் சுமந்து வர வேண்டிய நிலை உள்ளது. மேலும் இரவு நேரங்களில் இங்கு வரும் பொதுமக்கள் அங்கு சுற்றித்திரியும் விஷ பூச்சிகள், பாம்பு கடிக்கு ஆளாகின்றனர். இந்த மயானத்தில் உள்ள முட்செடிகளை அகற்றி குடிநீர், தெருவிளக்கு போன்ற வசதிகளை செய்து தர வேண்டும் என்று முன்னாள் கவுன்சிலர் கவிதா நாராயணன் பலமுறை மணலி மண்டல அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தார். ஆனாலும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.