ஆலந்தூர்: கிண்டி 170வது வார்டில் அடங்கிய மெட்ரோ ரயில் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். சென்னை மாநகராட்சி பகுதி முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த திட்டம் 20 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து வார்டுகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் கிண்டி 170வது வார்டில் அடங்கிய மெட்ரோ ரயில் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்களுடன், தொழில் நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள், ஓட்டல்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வீடு மற்றும் தொழில் நிறுவனம் வணிக நிறுவனங்களில் சேரும் திடக்கழிவுகளை அகற்றுவதற்கு பெரும் தொகை செலவிட வேண்டியுள்ளது. கிண்டி ரங்கநாதன் தெரு, சாய்பாபா கோயில் தெரு, அண்ணாசாலை சந்து, கிண்டி பிரதான சாலை போன்ற பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள், ஓட்டல்கள், தொழில் நிறுவனங்கள் போன்றவற்றில் இந்த பாதாள சாக்கடை வசதி இல்லாமல் உள்ளது.