சிவ ராத்திரியை முன்னிட்டு ஐசிஎப்பில் நாளை முதல் 12 ஜோதி லிங்கம் அமர்நாத் பனி லிங்கம் தரிசனம்: பிரம்மா குமாரிகள் இயக்கம் ஏற்பாடு

சென்னை: சிவ ராத்திரியை முன்னிட்டு நாளை 18ம் தேதி முதல் 12 ஜோதி லிங்கம், அமர்நாத் பணி லிங்கம் ஆகியவற்றை ஒரே இடத்தில் தரிசனம் செய்ய பிரம்மா குமாரிகள் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து பிரம்மா குமாரிகள் இயக்க தமிழக மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் பி.கு.பீனா கூறியதாவது: பிரம்மா குமாரிகள் இயக்க 84வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு சிவராத்திரி தினத்தை சேர்த்து கொண்டாட திட்டமிட்டுள்ளது. சிவ ராத்திரி என்பது சிவ ஜெயந்தி என்பதால் பாரதத்தின் புகழ்மிக்க 12 ஜோதிர் லிங்கங்களையும், அமர்நாத்தில் உள்ள பனி லிங்கத்தையும் ஒரே இடத்தில் மக்கள் தரிசிக்க சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை நகரின் ஐசிஎப் பேருந்து நிலையம் அருகில் உள்ள ரயில்வே பாதுகாப்புத்துறையின் மைதானத்தில் இம்மாபெரும் ஆன்மீக நிகழ்ச்சி நாளை 18ம் தேதி முதல் 24ம் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை தரிசனத்துக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். இந்த லிங்க தரிசனங்களை பார்த்த பிறகு, ராஜயோக ஞான விளக்கம் பட கண்காட்சியாகவும், வீடியோ காட்சியாகவும் காண்பிக்கப்படும். அதன்பிறகு 5 நிமிடம் அமர்ந்து தியானிக்க, பிரத்யேக கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் மாலை 6 மணியில் இருந்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் அஷ்டலட்சுமி, நவதேவிகள் மற்றும் கைலாச திருக்காட்சி போன்றவைகளின் தத்ரூப காட்சிகளும் நடைபெற உள்ளன. அனைத்துக்கும் அனுமதி இலவசம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: