ஆவடி மாநகராட்சியில் தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு: பொதுமக்கள் கடும் அவதி

ஆவடி: ஆவடி மாநகராட்சியில் ஆவடி, திருமுல்லைவாயல், அண்ணனூர், கோவில்பதாகை, பட்டாபிராம், மிட்டினமல்லி, முத்தாபுதுப்பேட்டை ஆகிய பகுதிகள் உள்ளன. மேலும், ஆவடியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, விமான படை பயிற்சி மையம், போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், டேங்க் பேக்டரி, படைத்துறையின் உடை தொழிற்சாலை, மத்திய வாகன கிடங்கு, ரயில்வே பணிமனை, தமிழ்நாடு சிறப்பு காவல் படைகள், காவலர் பயிற்சி மையம் ஆகியவைகளும் உள்ளன. மேற்கண்ட பகுதியில் நாய்களின் தொல்லை அதிகமாகவே உள்ளது. ஒவ்வொரு தெருவில் சுமார் 10க்கு மேற்பட்ட நாய்கள் சுற்றி திரிக்கின்றன. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ஆவடி பகுதியில்  சாலையில் நடந்து செல்லும் முதியோர், பெண்கள், சிறுவர்கள் ஆகியோரை நாய்கள் விரட்டுகின்றன.  இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘இரவு நேரங்களில் வேலை முடிந்து வீட்டிற்கு இருசக்கர வாகனங்களில் வரும் தனியார் ஊழியர்கள், டியூசன் முடிந்து வரும் மாணவர்கள் என யாரையும் நாய்கள் விட்டு வைப்பதில்லை. அவர்களை

விரட்டும் போது வாகனங்களில் இருந்து விழுந்து படுகாயம் அடைகின்றனர். இந்த பகுதியில் உள்ள பாஸ்ட் புட், இறைச்சி கடைகளில் உள்ள கழிவுகளை நாய்கள் சாப்பிட்டு வெறி கொண்டு அலைந்து திரிக்கின்றன. இவைகள் தெருவில் செல்லுவோரை விரட்டி கடிக்கின்றன. இதனால், உயிர் பலியும் ஏற்பட்டு உள்ளது. மேலும், சுற்று சுவர் இல்லாத வீடுகளுக்குள் புகுந்து கண்டபடி குரைக்கின்றன.  

    

இதோடு மட்டுமல்லாமல், இரவு நேரங்களில் தெருக்களில் நாய்கள் ஒன்றாக சேர்ந்து ஊழை இடுகின்றன. இதன் காரணமாக, குடியிருப்பு வாசிகளின் தூக்கத்தை தொலைத்து அவதிப்படுகின்றனர். எனவே, இனி மேலாவது ஆவடி மாநகராட்சியில் நாய்களை பிடித்து அப்புறப்படுத்திடவும், இனபெருக்கத்தை தடுக்க கருத்தடை அறுவை சிகிச்சை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

ஊசி, மருத்துகள் இல்லை

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘ஆவடி பகுதியில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்தி 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. மேலும், நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்திட கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்யப்படுவது இல்லை. இதன் காரணமாக,  தெருக்களில் நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தற்போது, மாநகராட்சி பகுதியில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளன. இவைகள் கடித்தால், ஆவடி அரசு மருத்துவமனை, சுகாதார நிலையங்களில் ஊசி, மருத்துகள் இல்லை. நாய்கடி சிகிச்சைக்காக பொதுமக்கள் சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை தான் நாடி செல்லும் நிலை உள்ளது’’ என்றனர்.

Related Stories: